கே. ஏ. சொக்கலிங்க பாகவதர்[1] (Chokkalinga Bhagavathar; 1907[2] – 21 சனவரி 2002)[3] ஒரு பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர். திலோத்தமா, துகாராம், வீடு, இந்தியன், சந்தியா ராகம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இசை நாடக நடிகராகப் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர்.
ரம்பையின் காதல் படத்தில் நடித்ததற்காகத் தங்கப்பதக்கம் பெற்றவர். அதன் பின், பாலு மகேந்திராவின்வீடு, சந்தியா ராகம் படங்களில் நடித்த பிறகுதான் பரவலாக அறியப்பட்டார். இந்தப் படங்களில் நடித்ததன் மூலம் தேசிய விருதும் பெற்றார்.[4]
சொக்கலிங்க பாகவதர் சிறு வயதிலேயே நன்றாகப் பாடக்கூடியவர். இவரது குரல் இனிமையைக் கேட்டு 1921-ல் காளி என். ரத்தினம் தான் நடித்துக் கொண்டிருந்த 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'யில் இவரைச் சேர்த்துவிட்டார். 'சத்தியவான் சாவித்திரி' நாடகத்தில் 'காக்க வேணும் ராமா' எனும் பாட்டை பாடினார். அதன் பின்னர் திருப்பாப்புலியூர், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் நாடகங்களில் நடித்து, இறுதியில் சென்னை வந்து சேர்ந்தார். 1922-இல் 'மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபை'யில் சேர்ந்து நடித்தார்.[4]
இவருடன் சேர்ந்து நாடகங்களில் நடித்து பின்னர் புகழ் பெற்றவர்களில் எம்.ஜி.ஆர், எம். ஜி. சக்ரபாணி, எம். கே. தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா ஆகியோர் குறிப்படத்தக்கவர்கள்.[4]
1934 ஆம் ஆண்டு சென்னையில் மியூசிக்கல் புராடக்ஸ் லிமிடெட் (Musical Products Ltd.) என ஒரு கம்பெனி உருவானது. இவர்கள் 10 அங்குல விட்டமுடைய இசைத்தட்டுகளை அறிமுகப்படுத்தினார்கள். வழமையான 78 ஆர்.பி.எம். இசைத்தட்டுகள் 12 அங்குல விட்டம் கொண்டிருக்கும். அவற்றில் மூன்றரை நிமிடம் வரையான பதிவுகளை செய்தார்கள். ஆனால் இந்த 10 அங்குல இசைத்தட்டுகளில் நான்கரை நிமிடம் வரையான பதிவுகளைச் செய்ய முடிந்தது. இந்த இசைத்தட்டுகள் புரோட்காஸ்ட் (Broadcast) என்ற (label) லேபிளைக் கொண்டிருந்தன. இதனால் சாதாரண மக்கள் புரோட்காஸ்ட் ரெக்கார்ட் கம்பெனி என இந்த நிறுவனத்தைக் குறிப்பிட்டனர். இந்த நிறுவனம் தனது முதல் வெளியீடாக ஏழு இசைத்தட்டுகள் கொண்ட சீதா கல்யாணம் என்ற தொகுதியை வெளியிட்டது. 7 இசைத்தட்டுகளும் ஒரு உலோகப் பேழையில் பொதியாக்கப்பட்டு 11 ரூபா 4 அணாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சுதேசமித்திரன் பத்திரிகையில் விளம்பரம் வெளியானது.[5] இந்த சீதா கல்யாணம் இசைத்தட்டுத் தொகுதியிலுள்ள பாடல்களைத் தான் பாடியதாகவும் அதனால் அந்த நிறுவனம் தம்மை பாகவதர் எனப்பெயரிட்டு அழைத்ததாகவும் சொக்கலிங்க பாகவதர் ஒரு தமிழ் இணைய இதழுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.[4]
இவர் நடித்த முதல் திரைப்படம் எஸ். சௌந்தரராஜ ஐயங்கார் எடுத்த 'சம்பூர்ண மகாபாரதம்'.[4]
சன் டிவியில் தொடராக வந்த 'குடும்பம்' உட்பட சில தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்தார்.[4]
இவரது 90 வயதில் தமிழக அரசு கலைமாமணி விருதும், குடியிருக்க வீடும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[4]